GuidePedia

0
பங்குசந்தை: நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 2



ஒரு நிறுவனத்தின் பங்கு எப்பொழுது உயரும் ? அந்த நிறுவனம் வளர்ச்சியடைந்தால் தான் அதன் பங்குகளும் உயர்வடையும் ? வளர்ச்சியின் அளவுகோள்கள் என்ன ? உற்பத்தி, விற்பனை, வருமானம், நிகர லாபம் இவையெல்லாம் தான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும். நாம் நம் பணத்தை முதலீடு செய்யும் பொழுது நம் பணம் பெருக வேண்டும் என்ற ஆசையில் தான் முதலீடு செய்கிறோம். ஆனால் நாம் முதலீடு செய்யும் நிறுவனம் வளர்ச்சியடைந்தால் மட்டுமே நம் பணம் பெருக முடியும்.

ஒரு நிறுவனத்தின் தற்கால லாபத்தை மட்டுமே கொண்டு முதலீடு செய்யக் கூடாது. கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு எந்தளவுக்கு ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் உயர்ந்துள்ளது, வரும் ஆண்டில் எந்தளவுக்கு உயரும் என்பதைத் தான் நாம் கவனிக்க வேண்டும். கடந்த ஆண்டு 10% வளர்ந்த ஒரு நிறுவனம், இந்த ஆண்டு 12% மாக உயர்ந்தால் தான் அது வளர்ச்சி. ஒரு நிறுவனம் உயர்ந்தால் தான் நாம் வாங்கும் பங்குகளும் உயரும். அந்த உயர்வும் அதன் வளர்ச்சிக்கு ஏற்றாற் போலவே இருக்கும். 10% மாக இருந்த வளர்ச்சி அதே அளவுக்கு இருந்தால், நாம் வாங்கும் பங்குகளும் அதே விலையில் தான் இருக்கும். லாபத்தில் சரிவு இருந்தால், நம்முடைய சேமிப்பின் மதிப்பும் கரைந்து போய் விடும்.

எனவே நாம் பங்குகளை வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றி கணித்தப் பிறகே வாங்க வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு இருக்கக் கூடிய வர்த்தக வாய்ப்பு, அந்தத் துறைக்கு இருக்க கூடிய வாய்ப்புகள், போட்டி நிறுவனங்கள் இதைப் பொறுத்தே அந்த நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும்.

வளரும் நிறுவனங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.


குறைவாக வளரும் நிறுவனங்கள்
சராசரியாக வளரும் நிறுவனங்கள்
வேகமாக வளரும் நிறுவனங்கள்

குறைவாக வளரும் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்காது. தற்போதையச் சூழலில் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தை உதாரணமாகச் சொல்லலாம். FMCG நிறுவனங்கள் என்று சொல்லப்படும், இத்தகைய நிறுவனங்கள் ஒரு காலத்தில் வேகமாக வளர்ந்தன. கோடிக்கணக்கான இல்லங்களை இவர்களின் தயாரிப்புகள் எட்டியது. ஆனால் தற்பொழுது உள்ள சுழலில் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கிறது. புதியதாக மக்களை கவரும் எந்தப் பொருட்களையும் தயாரிக்காமல், இருக்கின்ற சந்தையை தக்க வைத்துக் கொள்ளவே இந்த நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. வளர்ச்சி மிகக் குறைவாகவே இருக்கிறது. தற்போதைய சூழலில் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் பணம் பெருகாது.

சராசரியாக வளரும் நிறுவனங்கள் என்று இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களை சொல்லலாம். ஆட்டோ நிறுவனங்களை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஹீரோ ஹோண்டா, பஜாஜ், மாருதி போன்ற நிறுவனங்கள் வேகமாக வளரும் நிறுவனங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10% - 15% லாபத்தை இந்தப் பங்குகள் கொடுக்கும். இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது ஓரளவிற்கு பாதுகாப்பானது என்று சொல்லாம். பெரும்பாலும் பெரிய நிறுவனங்களான ரிலயன்ஸ் போன்றவை இனி அதிக வளர்ச்சி பெறக்கூடியவை அல்ல. ஆனால் சராசரியாக 20% அளவுக்கு லாபம் தரக்கூடியவை.

வேகமாக வளரும் நிறுவனங்களாக மென்பொருள் நிறுவனங்களைச் சொல்லலாம். பல நிறுவனங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் 50% லாபம் தந்தது. விப்ரோ 30% கொடுத்தது. Outsourcing மூலம் கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகள், மென்பொருள் நிறுவனங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கின்றன. இதைத் தவிர நடுத்தரமான நிறுவனங்கள் வேகமாக வளரக் கூடியவை. மிட்கேப் என்று சொல்லப்படும் இந்த நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத் தளங்களைப் பெருக்கிக் கொண்டு வேகமாக வளரக் கூடியவை. இத்தகைய நிறுவனங்களில் மிக அதிக லாபம் கிடைக்கும். ஆனால் தங்களுடைய வர்த்தகத் தளங்களை அதிகப்படுத்த இந்த நிறுவனங்கள் முயற்சிக்கும் பொழுது சில நேரங்களில் சறுக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு சறுக்கும் பொழுது பங்குகளும் கடுமையாகச் சரியும். எனவே வேகமாக வளர்ந்தாலும், இந்த நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்புகளையும், சாதகமான மற்றும் பாதகமான சூழல்களையும் ஆராய்ந்தப் பிறகே முதலிடு செய்ய வேண்டும்.

இவற்றையெல்லாம் எப்படி ஆராய்வது ? ஆண்டறிக்கையை கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் தெரியவரும். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு காலாண்டிலும் அந்த காலாண்டிற்கான அறிக்கையைத் தாக்கல் செய்யும். அந்த அறிக்கைகளைக் கொண்டு எந்தளவுக்கு ஒரு நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அறிக்கைகளை எப்படி ஆராய்வது என்பதை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Post a Comment Blogger

 
Top