GuidePedia

0
பங்குசந்தை: நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 1



பங்குகளை வாங்க வேண்டும். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளையே வாங்க வேண்டும் என்ற கருத்தை என் முந்தையப் பலப் பதிவுகளில் முன்வைத்துள்ளேன். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?

நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்த்திருக்கிறீர்களா ? பங்குகளில் முதலீடு செய்யும் எத்தனைப் பேர் ஆண்டறிக்கையைப் பார்த்து, ஆய்வு செய்து பங்குகளை வாங்கியிருக்கிறீர்கள் ? நமக்குக் கிடைக்கும் ஏதோ ஒரு டிப்ஸ், ஏதோ ஒரு தினசரியில் "Buy" என்று முத்திரைக் குத்தப்பட்டப் பங்குகள். இவைகளைக் கண்டு தானே சிறிதளவுக் கூட யோசிக்காமல், பங்குகளை வாங்குகிறோம். ஏன் இத்தகைய மனநிலை ?

"நம்மால் ஆய்வு செய்ய முடியாது. இது ஒரு சிக்கலான கணக்கு வழக்கு" என்ற எண்ணமே நம்மை ஆட்டிப் படைக்கிறது. வணிக நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் Technical Analysis, Resistance Level, Support Level,
Relative Strength Index என்று பலப் புரியாத வார்த்தைகளைச் சொல்லி நம்மை மிரட்டி வைத்துள்ளன. அனலிஸ்டுகள் நன்றாக ஆய்வு செய்து தான் சொல்வார்கள் என்ற எண்ணத்தில், கடவுளின் மேல் பாரத்தை
போட்டு விட்டு நாமும் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்வோம்.

அதுவும் நமக்கு இது வரை தெரியாதப் பங்குகளை சொன்னால் தான் நாம் வாங்குவோம். "பல்ராம்பூர் சினி" நல்ல லாபமடையும் என்று அனலிஸ்டுகள் ஆருடம் சொல்வார்கள். அது என்ன நிறுவனம். என்ன உற்பத்திச் செய்கிறது.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், டிப்சை அப்படியே பின்பற்றி வாங்குவோம். அந்த நிறுவனம் நல்ல நிறுவனமாகவே இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யாமல் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்யலாமா ?

சிக்கலான கணக்குகளைப் போடாமல் எளிதாக ஆராய முடியும். நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஆய்வு தான் என்று என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தேன். அது ஆராய்ச்சியின் ஆரம்ப நிலை
தான். நம்முடைய ஆராய்ச்சியின் அடுத்த நிலை அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்ப்பது தான். பஜாஜ் நிறுவனத்தைப் பற்றி உதாரணமாக கூறியிருந்தேன். பஜாஜ் பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தி, அந்த
மாடல் அனைவரையும் கவர்ந்து விற்பனைப் பெருகிய பொழுது, பஜாஜ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்று கூறியிருந்தேன். ஏனெனில் அதிக அளவில் அந்த பைக்குகள் விற்பதால் பஜாஜின் உற்பத்திப் பெருகி,
லாபமும் அதிகரித்து, பங்குகளின் விலையையும் எகிறச் செய்யும். அந்தக் கதையின் இன்னெரு பக்கமும் உள்ளது.

ஹிந்துஸ்தான் லீவர் என்ற நிறுவனத்தைப் பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மளிகைக் கடையில் கிடைக்கும் சோப்பு, டூத்பேஸ்ட் என்று அனைத்துப் பொருட்களும் இந்த நிறுவனத்தால் தான்
தயாரிக்கப்படுகின்றன. என் நண்பர் ஒருவர் ரூ25,000 பங்குகளில் முதலீடு செய்வதென முடிவு செய்தார். பலவாறு யோசித்து ஹிந்துஸ்தான் லீவரே சிறந்த நிறுவனம் என முடிவு செய்து, அந்தப் பங்குகளில் முதலீடு
செய்தார். அவர் முதலீடு செய்த பொழுது பங்குகளின் விலை 250 ரூபாய். இந்த வருடம், கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு விலைச் சரிந்து பங்குகளின் விலை 125ரூபாயாகி விட்டது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான வீடுகளில் உபயோகிக்கப்படும் பலப் பொருட்கள் இந் நிறுவனத்திற்குச் சொந்தமானவை தான். பின் ஏன் பங்குகள் சரிவடைந்தன. அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையைப் பார்த்திருந்தால்
தெரிந்திருக்கும்.

பஜாஜ் கதைக்கு வருவோம். பல்சர் அறிமுகம் செய்தாகி விட்டது. பல்சரும் பெருகி விட்டது. பஜாஜ் பங்குகள் விலையும் எகிறி விட்டது. இன்றும் கூட பல்சர் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டு தானே இருக்கிறது.
பாஜாஜின் பங்குகளை தற்பொழுது வாங்கலாமா? இங்கு தான், நம்முடைய விற்பனை ஆய்வை, ஆண்டறிக்கையுடன் பொருத்திப் பார்க்கும் ஆய்வு
தேவைப்படுகிறது. பஜாஜின் மொத்த உற்பத்தியில் பல்சரின் உற்பத்திச் சதவீதம் என்ன ? பிற மாடல்களின் உற்பத்திச் சதவீதம் என்ன ? சென்ற ஆண்டு பல்சர் எந்தளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு
எந்தளவுக்குச் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா ? பைக் சந்தையில் பஜாஜின் பங்கு எவ்வளவு (Market Share). Market Share அதிகரித்துள்ளதா ? குறைந்துள்ளதா ? போட்டி நிறுவனங்களுடன்
ஒப்பிடும் பொழுது பஜாஜின் விற்பனை எப்படியுள்ளது ? இப்படியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வின் முடிவு நமக்கு எதைச் சொல்லும் ?

பஜாஜ் நிறுவனத்தின் உற்பத்தி, சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்றால் பஜாஜ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தானே பொருள். ஒரு நிறுவனம் வளரும் பொழுது அந்த நிறுவனத்தின் பங்குகளும் உயரும். வளர்ச்சி குறையும் பொழுது அதற்கேற்றாற்ப் போல் பங்குகள் விலையும் சரியும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது பங்குகளின் விலையும் அதை பிரதிபலிக்கும். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஹிந்துஸ்தான் லீவர் பங்குகள் சரிந்தது இந்த விதிகளின் படி தான்.
போட்டி நிறுவனங்கள் பெருகி விட்டதால் அந்த நிறுவனத்தின் பொருட்கள், கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் சந்தையில் குறைவாகவே விற்பனையாகிறது. கடந்த வருடங்களை விட இந்த வருடம் அந் நிறுவனத்தின் விற்பனை மிக மோசமாகவே இருந்தது. அதன் எதிரொலி சந்தையிலும் இருக்கத் தானே செய்யும். நல்ல வளர்ச்சியடைந்த பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதை விட, வளரும் நிறுவனங்களில்
முதலீடு செய்வதே சிறந்தது. இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனமான பார்தி நிறுவனப் பங்குகள் தான் அதிக லாபமடைந்தன. ஏன் இந்த வளர்ச்சி ? "நீங்கள் எங்கிருந்தாலும், அங்கே ஏர்டெல் கிடைத்தப் பொழுதே" உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். ஏர்டெல் வளருகிறது. இந்த எண்ணம் தோன்றியவுடன் அந்தப் பங்குகளையும் வாங்கியிருந்தால், ஏர்டெல்லுடன் நாமும் வளர்ந்திருப்போம்.

கடந்த ஒரு வருடத்தில் பார்திப் பங்குகள் சுமார் 100% வளர்ச்சிப் பெற்றிருந்தன. நீங்கள் 2003 டிசம்பரில் ரூ10,000 முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 20,000 ரூபாய். அது போலவே வரும் ஆண்டுகளில் இந்த நிறுவனம் எந்தளவுக்கு வளரும் என்பது இந்தியாவில் உள்ள மக்கள் தொகையைக் கணக்கிடும் பொழுதே, நமக்குப் புரியும். மக்கள் தொகையில் ஏர்டெல்லுக்கு மிக அதிக வர்த்தக வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால் தான் வளர்ச்சியில் தேக்கமடைந்த பெரிய நிறுவனப் பங்குகள் அதிக லாபம் தருவதில்லை. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் தான் லாபம் அதிகம் தரும். 2004ம் ஆண்டு கூட நடுத்தர நிறுவனப் பங்குகளான
மிட்கேப் (Midcap) பங்குகள் தான் அதிக லாபம் தந்தன.

அடுத்து வரும் பதிவுகளிலும் நிறுவனங்களை எப்படி ஆய்வு செய்வது என்பதைத் தொடர்ந்துப் பார்ப்போம்.

Post a Comment Blogger

 
Top